மாவட்ட செய்திகள்

தொண்டர்களுக்கு செய்த துரோகத்தினால் எத்தனை நதிகளில் நீராடினாலும் எடப்பாடி பழனிசாமிக்கு பாவம் போகாது

தொண்டர்களுக்கு செய்த துரோகத்தினால் எத்தனை நதிகளில் நீராடினாலும் எடப்பாடி பழனிசாமிக்கு பாவம் போகாது என்று திருச்சியில் டி.டி.வி. தினகரன் கூறினார்.

திருச்சி,

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திருச்சியில் நடந்த கூட்டத்தில் இயக்க தொண்டர்கள், நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் உணர்வு பூர்வமாக பங்கேற்றார்கள். இதுபற்றி தீபா போன்றவர்கள் கூறிய கருத்துக்களை பொருட்படுத்த வேண்டியது இல்லை. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த கூட்டத்தில் கோரிக்கை வைக்கப் பட்டது.

சபாநாயகர் தனபாலும், எடப்பாடி பழனிசாமியும் நீதிமன்றம் என ஒன்று இருப்பதையே மறந்து செயல்பட்டு வருகிறார்கள். 18 எம்.எல்.ஏ.க் கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

துரோக ஆட்சியிடம் இருந்து கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக போராடிய போராளிகளான 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் ஜனநாயக படுகொலை மூலம் தகுதி நீக்கம் செய்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பிய ஆணை அரசியல் வாதியின் கடிதம் போல் தான் இருக்கிறது. நம்பிக்கை வாக் கெடுப்பின் போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

நாங்கள் தி.மு.க.வுடன் ஏன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும்? தி.மு.க.வினர் அவர்களது 21 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்பதற்காக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள். 18 எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நாங்களும் அந்த வழக்கில் இணைந்து கொண்டோம். இது ஒரே கோரிக்கை என்பதால் நடந்ததாகும்.

அவர்கள் ஜனநாயக முறைப்படி அவர்களது பணியை செய்கிறார்கள். நாங்கள் எங்கள் வழியில் செயல்படுகிறோம். எதிர்க்கட்சி என்பதால் அவர்களை தரம் தாழ்த்தி பேசக்கூடாது. நாங்கள் நாகரீக அரசியல் செய்கிறோம். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் தான் உத்தரவிடவேண்டும். ஆட்சியை கலைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஆட்சியை கலைக்க வேண்டும் என ஸ்டாலின் கூற முடியாது.

முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மயிலாடுதுறை காவிரி ஆற்றில் மூழ்கி, மூழ்கி குளித்து இருக்கிறார். ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும், பொதுச்செயலாளருக்கும் செய்த துரோகம் அவர் காவிரியில் மட்டும் அல்ல ராமேசுவரம், காசி என எத்தனை நதிகளில் நீராடினாலும் பாவம் போகாது.

அவரும் அமைச்சர்களும் நீராடியதால் ஆற்றின் புனித தன்மை தான் கெடும். எடப்பாடி பழனிசாமி செய்த துரோகம் தமிழக வரலாற்றில் மன்னிக்க முடியாத குற்றமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.