மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் வரிபாக்கி செலுத்தாத திருமண மண்டபத்துக்கு சீல் வைப்பு

தூத்துக்குடியில் வரிபாக்கி செலுத்தாத திருமண மண்டபத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் வரிபாக்கி செலுத்தாத திருமண மண்டபத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.

வரிபாக்கி

2021-22-ம் நிதியாண்டு முடிவடையும் நிலையில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் வரியில்லா இனங்களை வசூல் செய்ய தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக வரி நிலுவையில் உள்ள கட்டிடங்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் வணிக கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

சீல் வைப்பு

இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான திருமண மண்டபத்துக்கு கடந்த 3 ஆண்டுகளாக சொத்துவரி செலுத்தாமல் சுமார் ரூ.6 லட்சம் வரிபாக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து சிறப்பு வருவாய் ஆய்வாளர் கணேசன் தலைமையில், வருவாய் உதவியாளர்கள் முனிராஜ், முருகானந்தம், கார்த்திக், சுப்பிரமணி உள்ளிட்ட ஊழியர்கள் நேற்று வரிபாக்கி செலுத்தாத திருமண மண்டபத்தை பூட்டி சீல் வைத்தனர்.

மேலும் நீண்டகாலமாக வரி நிலுவை வைத்துள்ள கட்டிடத்தின் உரிமையாளர்கள் உடனடியாக அந்தந்த கால அளவுக்குள் வரிகளை மாநகராட்சிக்கு செலுத்தி, மாநகராட்சியால் எடுக்கப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்குமாறு மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ கேட்டுக் கொண்டு உள்ளார்.