பெங்களூரு:
7 பேருக்கு ஒமைக்ரான்
பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் புதியவகை கொரோனாவான ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 31 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. மேலும் ஏராளமான நபர்களின் பரிசோதனை அறிக்கை வரவேண்டி இருந்தது.
இந்த நிலையில் நேற்று கர்நாடகத்தில் புதிதாக 7 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் தான் 7 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நேற்று இரவு டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் 38 ஆக உயர்வு
அதன்படி டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு வந்த 76 வயது முதியவர், லண்டனில் இருந்து வந்த 54 வயது ஆண், 20 வயது வாலிபர், அமெரிக்காவில் இருந்து வந்த 15 வயது சிறுவன், டெல்லியில் இருந்து வந்த 62 வயது முதியவரும் ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த 63 வயது முதியவர் மற்றும் 30 வயது பெண்ணும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பதாக மந்தரி சுதாகர் தெரிவித்திருக்கிறார்.
ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ள 7 பேருடன் நேரடியாக மற்றும் 2-வது கட்டமாக தொடர்பில் இருந்த அனைவரும் சிக்கியிருப்பதாகவும், அவர்களுக்கும் ஒமைக்ரான் பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூருவில் மட்டும் 26 பேர் ஒமைக்ரான் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.