புதுக்கோட்டை,
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்
புதுக்கோட்டை மாவட்டம் மேலவிடுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் பாண்டி (வயது 25), புதுக்கோட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் முகமது ஷபினா. இவருடைய மகன் முகமது ரபீக் (28). இவர்கள் இருவரும் நண்பர்கள்.
நேற்று மாலை புதுக்கோட்டையில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் பாண்டி, முகமது ரபீக் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் புதுக்கோட்டை அருகே உள்ள திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, திருச்சியில் இருந்து காரைக்குடி நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
2 வாலிபர்கள் பலி
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாண்டி, முகமது ரபீக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். மேலும் மோட்டார் சைக்கிளின் முன்பகுதி சேதம் அடைந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பாண்டி, முகமது ரபீக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த காரைக்குடி அருகே உள்ள கண்டனூரை சேர்ந்த முருகானந்தம் காயம் அடைந்தார். அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காரில் வந்த மேலும் 3 பேர் காயம் இன்றி உயிர் தப்பினர்.
போலீசார் விசாரணை
இந்த விபத்து தொடர்பாக கார் டிரைவர் முருகானந்தம் மீது திருக்கோகர்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.