சென்னை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மே பதினேழு இயக்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரிபவன் எதிரே உள்ள ஆண்டர்சன் சாலை சந்திப்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போலீசார் தடுப்புவேலிகளை அமைத்து, தங்களுடைய கட்டுப்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதித்து இருந்தனர். அங்கு மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் 100 பேர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், பா.ஜ.க., காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.
மத்திய அரசுக்கு எந்தவித வரியையும் செலுத்தமாட்டோம் என்றும் ஆவேசமாக குரல் எழுப்பினர். பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியாகாந்தி ஆகியோரது உருவப்படம் தியீட்டு கொளுத்தப்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் ஏற்பட்டனர்.
ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் முடிந்தது என்று போலீசார் கருதியவேளையில், திருமுருகன் காந்தி உள்பட சிலர் தடுப்புவேலிகளை தாண்டி, சாஸ்திரிபவன் அலுவலகத்தை நோக்கி சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாஸ்திரிபவன் அலுவலக நுழைவுவாயில்கள் மூடப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் அவர்களால் அலுவலகத்துக்கு உள்ளே செல்ல முடியவில்லை.
இதனால் சாஸ்திரிபவன் என்று இந்தியில் பொறிக்கப்பட்ட பெயர் பலகையை உடைக்க முயற்சித்தனர். கற்களும், செருப்புகளும் வீசப்பட்டன. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்ய முற்பட்டபோது, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று போலீஸ் வேனில் ஏற்றி கைது செய்து அழைத்து சென்றனர். அப்போது போலீஸ் வேனை பலமாக தட்டியபடி சிலர் ஆவேசமாக கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.
மே பதினேழு இயக்கத்தினர் போராட்டம் காரணமாக நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவன் அலுவலகம் நேற்று பரபரப்புடன் கணப்பட்டது.