மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி புதிதாக 150 பேருக்கு தொற்று உறுதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியாகினார். புதிதாக 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

புதுக்கோட்டை:

கொரோனா தொற்று

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை தாக்கம் அதிகமாக உள்ளது. தினமும் தொற்று உறுதியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. மாவட்ட நிர்வாகமும், அரசு அதிகாரிகளும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை மற்றும் சிகிச்சைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று மேலும் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 392 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 108 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 343 ஆக அதிகரித்தது.

முதியவர் பலி

இந்த நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த 68 வயது முதியவர் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 855 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.