மாவட்ட செய்திகள்

கூடலூரில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரிடம் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வாக்குவாதம்

கூடலூரில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரிடம் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையே ஆட்சியை கைப்பற்றுவதில் போட்டி நிலவியது. கூடலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சரும், ஆவின் வாரிய இணைய தலைவருமான அ.மில்லர் தலைமையிலான அ.தி.மு.க.வினர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்து வந்தனர்.

இந்த நிலையில் கூடலூர் நெடுஞ்சாலைத்துறை பயணியர் விடுதியில் நீலகிரி மாவட்ட அமைப்பு செயலாளர் புத்திசந்திரன், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சசிகலா ஆதரவு அணியை சேர்ந்த நிர்வாகிகள் மீது அவர்கள் பல்வேறு புகார்களை தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஓரணியில் வருமாறு அழைப்பு

இதையடுத்து, மாவட்ட அமைப்பு செயலாளர் புத்திசந்திரன் அவர்களை அமைதிபடுத்தி கட்சி பணியாற்ற ஓரணியில் வருமாறு அழைப்பு விடுத்தார். இதையொட்டி ஆவின் வாரிய இணைய தலைவர் அ.மில்லர், ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து வெளியேறி சசிகலா தலைமையிலான கட்சியில் ஓரணியாக செயல்படுவதாக அறிவித்தார். ஆனால் மீதமுள்ள நிர்வாகிகள் தாங்கள் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அணியில் நீடிப்பதாக அறிவித்தனர்.

இதனால் குழப்ப நிலையே நீடித்து வருகிறது. பின்னர் அனைத்து நிர்வாகிகளும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.