தக்கலை,
தக்கலை அருகே உள்ள குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில் ஆராட்டு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வைகாசி விசாக திருவிழா
தக்கலை அருகே உள்ள குமாரகோவில், வேளிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை போன்றவை நடந்தன. நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது.
விழாவின் நிறைவு நாளான நேற்று காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு பசுவும், கன்றும் காட்சி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
ஆராட்டு விழா
பின்னர் ஆராட்டு விழாவுக்கு மூலவரான ஸ்ரீவேலியும், உற்சவமூர்த்திகளான முருகபெருமானும், வள்ளிதேவியும் எழுந்தருளினர். காலை 10 மணிக்கு கோவில் தெப்பக்குளத்தில் ஆராட்டு விழா நடந்தது. இதில் கோவில் மேலாளர் சுதர்சன குமார், பா.ஜனதா மாவட்டத் துணைத்தலைவர் குமரி ரமேஷ், திருவிழா கமிட்டி புரவலர் பிரசாத், தலைவர் சுனில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆராட்டிற்கு பின்பு கோவிலுக்கு சென்ற சாமிகள் உள்பிரகாரத்தை 7 முறை வலம் வந்தனர். பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த அபிஷேக பொருட்களான பால், பன்னீர், சந்தனம் போன்ற பல பொருட்களால் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது. விழாவில், குமரி, கேரளாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.