தாம்பரம்,
அரிவாள் வெட்டு
காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலம் கிராமத்தில் உள்ள துலுக்காத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ் குமார் (வயது 33). பெயிண்டர். இவரது உறவினர் பெருமாளிடம் அதே பகுதியை சேர்ந்த சிவா, சார்லஸ் ஆகியோர் சில நாட்களுக்கு முன்னர் தகராறில் ஈடுபட்டனர். இதை ராஜ்குமார் கண்டித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை ராஜ்குமார் ரத்தினமங்கலம் ஏரி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு உள்ள புதரில் மறைந்து இருந்த சிவா, சார்லஸ் ஆகியோர் ராஜ் குமாரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மயங்கிய நிலையில் இருந்த ராஜ்குமாரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மறியல் போராட்டம்
ராஜ்குமாரை அரிவாளால் வெட்டிய சிவா, சார்லஸ் ஆகியோரை உடனடியாக கைது செய்யக்கோரியும், தாழம்பூர் போலீசாரை கண்டித்தும் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் நேற்று திடீர் சாலைமறியல் போராட்டம் நடந்தது. இது குறித்து தகவல் அறிந்த ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட ராஜ்குமாரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உறவினர்கள் ராஜ்குமாரை வெட்டிய குற்றவாளிகளான சிவா, சார்லஸ் ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அடுத்து மறியலில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர். இந்த மறியல் காரணமாக வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் ரத்தினமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.