மாவட்ட செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களின் பெற்றோர்கள் ஆலோசனை கூட்டம்

ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் பெற்றோர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

ஜெயங்கொண்டம்,

கூட்டத்தில் உதவி தலைமை ஆசிரியர் ராஜப்பிரியன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கி பேசுகையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித்தேர்வு நெருங்கிவிட்டது. இந்த நேரத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நன்கு கவனிக்க வேண்டும். தேர்வு முடியும் வரை டி.வி. பார்க்கவோ, பொழுதை வீணாக கழிக்கவோ அனுமதிக்கக் கூடாது. இரவு நேரங்களில் அதிக நேரம் விழித்து படிப்பதை தவிர்த்து அதிகாலையில் அமைதியாக படிக்க வைக்க வேண்டும். படிக்கும்போது அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும். மாணவர்களுக்கு பெற்றோர்கள் நண்பனாகவும், தூண்டுகோலாகவும் இருக்க வேண்டும். வீட்டுவேலைகளை சில நாட்கள் ஒதுக்கி வைத்திருக்க உதவிட வேண்டும். மேலும் மாணவ-மாணவிகள் தாங்கள் படிக்க வேண்டிய பாடங்களை ஒவ்வொரு நாளுக்கும் பிரித்து நேரம் ஒதுக்கி படிக்க திட்டமிட வேண்டும். அதை இப்போதிருந்தே செய்ய வேண்டும். அடிக்கடி தியானம் செய்து மனதை ஒருநிலைப்படுத்தி படிக்க வேண்டும் என கூறினார். கூட்டத்தில், 10-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில், ஆசிரியர் சகஜானந்தா நன்றி கூறினார்.