மாவட்ட செய்திகள்

திருச்சி மேலரண் சாலையில் சமூக விலகல் வட்டம் இடாத வியாபாரிகளுக்கு அபராதம்

திருச்சி மேலரண் சாலையில் சமூக விலகல் வட்டமிடாத வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருச்சி,

திருச்சி மேலரண் சாலையில் சமூக விலகல் வட்டமிடாத வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சில்லறை வியாபாரம்

திருச்சி காந்தி மார்க்கெட் கொரோனா அச்சம் காரணமாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது அதைத்தொடர்ந்து திருச்சி மரக்கடை சந்திப்பு முதல் காமராஜர் வளைவு வரை உள்ள மேலரண் (மேலப்புலி வார்டு) சாலையில் இரவு மொத்த வியாபாரத்திற்கும், காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை சில்லறை வியாபாரமும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் மொத்த வியாபாரம் வெல்லமண்டி சாலை சந்திப்பில் இருந்து காந்தி மார்க்கெட் மணிகூண்டு, மீனாட்சி மகால், மயிலம் சந்தை வழியாக பாலக்கரை சிவாஜி சிலை வரை நடந்தது.

அபராதம் விதிப்பு

அதே வேளையில் மேலரண் சாலையில் நேற்று காலை சில்லறை காய்கறி விற்பனை வழக்கம்போல நடந்தது. போலீசார் அவ்வப்போது ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு எச்சரிக்கை செய்து கொண்டிருந்தனர். மேலும் கடைகளின் முன்பு பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் 1 மீட்டர் இடைவெளியில் வட்டம் போட சொல்லி அறிவுறுத்தப்பட்டனர்.

சமூக விலகலை அலட்சியம் செய்த வியாபாரிகளுக்கு உடனடியாக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடை எண் இல்லாமல், மல்லிக்கட்டுகளை சாக்குப்பையில் இருந்து கொட்டி 1 கட்டு ரூ.30-க்கு விற்பனை செய்த வியாபாரிக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.