மாவட்ட செய்திகள்

ஒழுங்காக படிக்கவில்லை என தாய் திட்டியதால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

ஒழுங்காக படிக்கவில்லை என தாய் திட்டியதால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திரு.வி.க நகர்,

சென்னை கொரட்டூர், தேவர் நகரில் உள்ள திருவல்லீஸ்வரர் காலனியை சேர்ந்தவர் துளசி (வயது 48). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி கீதா. மகள் ஹரிதா (17). ஹரிதா முகப்பேரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒழுங்காக நீ படிப்பதே இல்லை எனக்கூறி ஹரிதாவை அவரது தாய் கீதா திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஹரிதா அழுதுகொண்டே படுக்கை அறைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து உள்ளே சென்று பார்த்தபோது ஹரிதா தூக்கில் தொங்குவது கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மாணவியை மீட்டு, அருகில் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவி ஹரிதாவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த கொரட்டூர் போலீசார் ஹரிதா உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.