மாவட்ட செய்திகள்

மாவட்டம் முழுவதும் 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து - இன்று வழங்கப்படுகிறது

மாவட்டம் முழுவதும் 2½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்படுகிறது.

திண்டுக்கல்,

இளம்பிள்ளை வாதம் எனும் போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை சுமார் 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட இருக்கிறது. இதற்காக அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் என மாவட்டம் முழுவதும் 1,232 இடங்களில் முகாம்கள் நடக்கின்றன.

இதுதவிர 54 நடமாடும் குழுக்களும் அமைக்கப்படுகின்றன. இந்த நடமாடும் குழுவினர் மூலம் போக்குவரத்து வசதி இல்லாத சிறிய மலைக்கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட இருக்கிறது. இதையொட்டி சுகாதாரத்துறையினர், தன்னார்வலர்கள் என 5 ஆயிரத்து 435 பேர் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.

எனவே, மாவட்டம் முழுவதும் நடைபெறும் முகாம்களில், அந்தந்த பகுதிகளை சேர்ந்த 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளை பெற்றோர் அழைத்து வந்து போலியோ சொட்டு மருந்து வழங்கலாம் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.