மாவட்ட செய்திகள்

தனியார் தங்கும் விடுதிகளுக்கு முறையான அனுமதி பெற மாவட்ட நிர்வாகத்திடம் 31-ந் தேதிக்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்

கோத்தகிரி தாலுகாவில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளுக்கு முறையான அனுமதி பெற 31-ந் தேதிக்குள் மாவட்ட நிர்வாகத்திடம் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் கூறினார்.

கோத்தகிரி,

கோத்தகிரி தாலுகாவில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளை முறைப்படுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நசீர், சுகாதார ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

நீலகிரியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கோத்தகிரி தாலுகாவில் 60-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. ஆனால் 26 விடுதிகளின் உரிமையாளர்கள் மட்டுமே முறையான அனுமதி வழங்கக்கோரி ஆவணங்களை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பித்து உள்ளனர். அதிலும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் கேட்கப்பட்டுள்ள 29 விவரங்களில் பெரும்பாலானவை இணைக்கப்படவில்லை. எனவே 1,500 சதுர அடிக்கு வீடு கட்ட அனுமதி பெற்றுவிட்டு வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் விடுதிகள் மற்றும் 1,500 சதுர அடிக்கு மேல் கட்டப்பட்டுள்ள விடுதிகளின் ஆவணங்களை அதன் உரிமையாளர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் மாவட்ட நிர்வாகத்திடம் முறைப்படுத்துவதற்காக சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இல்லையென்றால் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி அந்த விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதி கூறும்போது, கோத்தகிரி தாலுகாவில் செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதிகளுக்கு முறையான அனுமதி பெற உரிமையாளர்கள் முன்வருதில்லை. எனவே சீல் வைக்கும் நடவடிக்கைகளை தவிர்க்க தேவையான விவரங்களுடன் கூடிய ஆவணங்களை மாவட்ட ஊராட்சிகளின் துணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் நகல்கள் புவியியல் துறை, வனத்துறை, வேளாண் துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு முறையான அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்றார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நசீர் பேசும்போது, தனியார் விடுதிகளில் தங்கும் வாடிக்கையாளர்களின் அடையாள அட்டைகளின் நகல்களை உரிமையாளர்கள் பெற வேண்டும். அதனை தினமும் இ-மெயில் மூலமாகவோ அல்லது நகல்களாகவோ போலீஸ் நிலையத்துக்கு தவறாது கொடுக்க வேண்டும். இதனால் குற்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்றார்.

கூட்டத்தில் கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.