மாவட்ட செய்திகள்

மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை சார்பில் மதுவிலக்கு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்

ராமநாதபுரத்தில் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை சார்பில் நடைபெற்ற மதுவிலக்கு விழிப்புணர்வு

ராமநாதபுரம்,

தமிழ்நாடு அரசு படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தும் வகையில் முதல்கட்டமாக 500 மதுபானக்கடைகளையும், 2வது கட்டமாக 500 மதுபானக்கடைகளையும் மூட உத்தரவிட்டுஉள்ளது. மேலும் மதுவிலக்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ராமநாதபுரத்தில் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை சார்பில் மதுவிலக்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்களை கையில் ஏந்தியும், கோஷமிட்டவாறும் சென்றனர்.

இந்த ஊர்வலம் வண்டிக்காரத்தெரு வழியாக தாலுகா அலுவலகத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் பேபி, கலால் உதவி ஆணையர் அமிர்தலிங்கம், தாசில்தார் சுகுமாறன், உதவி மகளிர் திட்ட அலுவலர்கள் ராஜா முகமது, சரவணபாண்டியன், குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.