தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள காமராஜர் தெருவில் இருக்கும் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் 400-க்கும் அதிகமானோர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆழ்துளை கிணறு மின் மோட்டார் இணைப்புடன் கூடிய குடிநீர் தொட்டி அமைத்து அதன் மூலம் இலக்கியம்பட்டி ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கி வருகிறது. இந்த குடிநீர் தொட்டியை அகற்ற அந்த பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் அந்த குடிநீர் தொட்டி முன்பு நேற்று திடீரென திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.