ஆட்டையாம்பட்டி:
ஆட்டையாம்பட்டி அருகே எஸ்.பாப்பாரப்பட்டி ஊராட்சி சாக்ரடீஸ் நகரில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் சிரமம் அடைந்து வந்தனர். இந்த நிலையில் குடிநீர் பிரச்சினைய தீர்க்கக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆட்டையாம்பட்டி போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.