நாமக்கல்:-
இருதரப்பினர் மோதல்
புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மின்னாம்பள்ளி ஊராட்சியில் அரசமரத்து காலனி உள்ளது. இங்கு ஒரு குறிப்பிட்ட சமூதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் மாவிளக்கு பூஜை நடந்தது. பின்னர் அந்த மாவிளக்குகளை முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்போது மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும், அரசமரத்து காலனி பகுதியினருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அதுமோதலாக மாறியது.
சாலை மறியல்
இதில் இரு தரப்பினரும் கல்வீசி தாக்கி கொண்டதில் அரசமரத்து காலனியை சேர்ந்த 11 வயது சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த சிறுவன் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இந்த நிலையில் சிறுவன் மீது தாக்குதல் நடத்தியவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரியும், ஊர்வலம் செல்ல மாற்றுப்பாதை வசதி செய்து தர வலியுறுத்தியும் புதன்சந்தையில் உள்ள சேந்தமங்கலம் சாலையில் ரெயில்வே மேம்பாலத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் அவர்களிடம் உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.