மாவட்ட செய்திகள்

நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தடுப்பூசி போட நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்

நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தடுப்பூசி போட நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.

இடிகரை

நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தடுப்பூசி போட நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.

கொரோனா தடுப்பூசி

கோவை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக கடந்த நில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 1,500-க்கும் கீழ் குறைந்து வருகிறது.

கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் கோவையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோவை மாநகர், புறநகர், கிராமங்களில் வசிக்கும் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிறப்பு தடுப்பூசி முகாம்களில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்

இந்த நிலையில் மாவட்டத்தில் தற்போது குறைவான அளவே தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. இதனால் நேற்று புறநகர் பகுதியில் மட்டும் சிறப்பு முகாமில் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இதன்படி நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு பள்ளி, பெரியநாயக்கன் பாளையம் அரசு ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த மையங்களில் நேற்று அதிகாலை முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்தனர். அவர்கள் அங்கு தடுப்பூசி போடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கூட்டத்தை தவிர்க்கும் வகையில் சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் டோக்கன் கொடுத்தனர்.

டோக்கன் கிடைக்காதவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 500 பேருக்கு கோவிஷில்டு, 100 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.