வேல்ராம்பட்டு ஏரியை கவர்னர் கிரண்பெடி சைக்கிளில் சென்று ஆய்வு செய்தபோது எடுத்த படம். 
மாவட்ட செய்திகள்

வேல்ராம்பட்டு ஏரியில் புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி ஆய்வு; தூய்மையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

வேல்ராம்பட்டு ஏரியில் ஆய்வு மேற்கொண்ட கவர்னர் கிரண்பெடி அதனை தூய்மையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சைக்கிளில் கவர்னர் ஆய்வு

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று காலை கவர்னர் மாளிகை குழுவினருடன் கிரண்பெடி சைக்கிளில் சென்று வேல்ராம்பட்டு ஏரியை ஆய்வு செய்தார்.

இதற்காக கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்ட அவர் உப்பளம் சாலை, கடலூர் சாலை வழியாக ஏரிக்கு சென்றார். அங்கு கடந்த ஆண்டு நடப்பட்ட பனங்கொட்டைகள் முளைத்திருந்ததை பார்த்து கவர்னர் கிரண்பெடி மகிழ்ச்சியடைந்தார். ஏரியில் முன்பைவிட அதிகமாக நீர் நிரம்பி இருப்பதை பார்த்து மகிழ்ந்தார்.

அதிகாரிகளுக்கு பாராட்டு

அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் ஏரியை தொடர்ந்து சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். பொருளாதார மேம்பாட்டிற்காக ஏரியில் மீன் வளர்ப்பதையும் கவர்னர் பார்வையிட்டார்.தொடர்ந்து ஏரியை சுற்றி பார்த்த அவர் அந்த பகுதியில் திறந்த வெளிகழிப்பிடம் இல்லாமல் இருப்பதை கண்டு பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை மற்றும் தூய்மை இந்தியா திட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.