மாவட்ட செய்திகள்

குடிநீர் குழாய் பதிக்கும் பணி: பொதுமக்கள் அவதி

குடிநீர் குழாய் பதிக்கும் பணி: சாலையோர பள்ளத்தால் பொதுமக்கள் அவதி

கொடைக்கானல்,

கொடைக்கானலில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், கீழ்க்குண்டாறு குடிநீர் திட்ட பணிகளுக்காக நகரின் பல்வேறு இடங்களில் குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது. இதற்காக சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளது. இதனால் சிறு, சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தநிலையில் மூஞ்சிக்கல் பகுதியில் குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்படாத நிலையில், அனந்த கிரி 5வது தெரு பகுதியில் மட்டும் திடீரென சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மூஞ்சிக்கல் ஆனந்தகிரி பகுதியில் 7 தெருக்கள் உள்ளன. ஆனால் 5வது தெருவில் மட்டும் குழாய் பதிக்க வேண்டிய அவசியம் புரியாத புதிராக உள்ளது. இதுமட்டுமின்றி அங்கு தோண்டப்பட்ட பள்ளத்தை சரியாக மூடவில்லை. இதனால் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படும் நிலை உள்ளது. மேலும் புழுதி பறந்து கொண்டிருக்கிறது என்றனர்.

எனவே கீழ்க்குண்டாறு பகுதியில் இருந்து குழாய்களை முதலில் பதித்து தண்ணீர் கொண்டு வர வேண்டும். அதன்பின்னர் நகர்ப்பகுதியில் உள்ள தெருக்களில் பகிர்மான குழாய்கள் பதிக்க வேண்டும். இதற்கான முயற்சியில் ஈடுபட நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.