சங்கரன்கோவில்:
மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, நகராட்சி ஆணையாளர் சாந்தி உத்தரவின் பேரில் கட்டிட ஆய்வாளர் கஜேந்திரன் மற்றும் தூய்மைப்பணியாளர்கள், போலீசார் சங்கரன்கோவிலில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு பழக்கடைகள் அகற்றப்பட்டன. மேலும் பிரதான சாலை, திருவள்ளுவர் சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. வியாபாரிகள் பலர் தங்கள் கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றினர்.
இதேபேன்று புளியங்குடி நகராட்சி ஆணையாளர் குமார் சிங் தலைமையில், நகராட்சி பொறியாளர் சுரேஷ், சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி ஆகியோர் முன்னிலையில், சுகாதார ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், ஈஸ்வரன், நகரமைப்பு ஆய்வாளர் காளீஸ்வரி, வருவாய் ஆய்வாளர் வைரமணி மற்றும் அலுவலர்கள் கொண்ட குழுவினர் நேற்று காந்தி பஜார் பகுதி முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரங்களை கொண்டு, ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த படிகள், கட்டிடங்கள், மேற்கூரைகள் இடித்து அகற்றப்பட்டன.