பெரம்பலூர்,
ஆலோசனை கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்துப்பகுதிகளிலும் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனைகூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் நந்தகுமார் தலைமை வகித்து பேசியதாவது:
உயர்நீதிமன்ற மதுரை கிளையின் ஆணையின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடங்கள், பொதுப்பணித்துறை தனது கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள் அதன் கரைகள் நெடுஞ்சாலைத்துறை தனது கட்டுப்பாட்டில் உள்ள சாலைஓரங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அனைத்தும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றிட அந்தந்த துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
2 மடங்கு வசூல்
மனிதர்கள், கால்நடைகள் மற்றும் சுற்றுப்புறத்திற்கும், வேளாண்மைக்கும் கேடு விளைவிக்கின்ற சீமைக்கருவேல மரங்களை பொது மக்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுக்கு சொந்தமான நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வேருடன் அகற்றிக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு அகற்றப்படாத பட்சத்தில் சன்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட துறைகள் மூலமாக சீமைக்கருவேல் மரங்கள் வேருடன் அகற்றப்பட்டு, அதற்குண்டான செலவின தொகையை சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடமிருந்து 2 மடங்காக வசூல் செய்யப்படும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
மாவட்ட வருவாய் அதிகாரி வேலு, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், நகராட்சி ஆணையர் முரளி, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், தாசில்தார்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.