மாவட்ட செய்திகள்

ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு

வெள்ளமடம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு நடந்தது.

ஆரல்வாய்மொழி:

வெள்ளமடம் அருகே உள்ள கரையான்குழியை சேர்ந்தவர் பொன்னுராஜ் (வயது62), ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர். இவரது மனைவி குவைத் நாட்டில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள். இருவரும் திருவனந்தபுரத்தில் வேலை பார்க்கின்றனர். பொன்னுராஜ் மனைவியுடன் குவைத்தில் தங்கியுள்ளார். இதனால், வீட்டை மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த உறவினர் ஒருவர் கவனித்து வந்தார்.

இந்தநிலையில் உறவினர் நேற்று அங்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது அறையில் பீரோவில் வைத்திருந்த 1 பவுன் தங்க மோதிரம், மற்றும் சில வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது. யாரோ மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பொருட்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

---