மாவட்ட செய்திகள்

சுசீந்திரம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர், விபத்தில் பலி

சுசீந்திரம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலியானார். திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிய போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

குலசேகரம்புதூர் அருகே உசரவிளை வடக்கு தெருவை சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 68). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர், இரவு 10.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார்.

சுசீந்திரம் அருகே வழுக்கம்பாறை பகுதியில் சென்ற போது, எதிரே மயிலாடியில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் ஏசுதாஸ் சாலையில் தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கிடையே எதிரே வந்த நபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். விபத்து நடந்தவுடன் அக்கம் பக்கம் நின்றவர்கள் விரைந்து வந்து ஏசுதாஸை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இந்த விபத்து குறித்து சுசீந்திரம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர்கள் பரத் லிங்கம், நடராஜா பிள்ளை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, ஏசுதாஸ் மீது மோதி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற நபரை தேடி வருகிறார்கள்.