மாவட்ட செய்திகள்

வக்கீல்கள் சாலை மறியல்

புதுக்கோட்டையில் வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்தவர் வக்கீல் வீரமுத்து. இவர் அரிமளம் அருகே வெள்ளாற்றில் மணல் கடத்தப்படுவது தொடர்பாக போலீசில் புகார் அளித்ததோடு, சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் வக்கீல் வீரமுத்து மீது திருமயம் தாசில்தார் பிரவீணா மேரி அளித்த புகாரின் பேரில் அவதூறு வழக்கு அரிமளம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வக்கீல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டையில் நேற்று வக்கீல்கள் கோர்ட்டு பணியை புறக்கணித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் திருமயம் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வக்கீல் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தனர். தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இந்த மறியல் குறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் வருவாய்த்துறை அதிகாரிகளும் வந்து வக்கீல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதன்பின் வக்கீல்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவம் காரணமாக கோர்ட்டு முன்பு நேற்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.