மும்பை,
மும்பையை சேர்ந்த நடிகை பாக்யஸ்ரீ ஜூகுவில் உள்ள பங்களா வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிண்டு(வயது26), மகேஷ்(33) ஆகிய 2 வாலிபர்கள் வீட்டு வேலைகள் செய்து வந்தனர். கடந்த 2014-ம் ஆண்டு நடிகை பாக்யஸ்ரீயின் மாமனார், மாமியார் வீட்டில் தனியாக இருந்தபோது, வேலைக்காரர்கள் இருவரும் மயக்க மருந்து கலந்த பாலை குடிக்க கொடுத்துவிட்டு, வீட்டில் இருந்த ரூ.26 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலைக்கார வாலிபர்கள் இருவரையும் வலைவீசி தேடிவந்தனர்.
ஆனால் அவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் இருந்து வந்தனர். இந்த நிலையில், அவர்கள் இருவரும் தானே வசந்த் விகார் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், இருவரும் தற்போது புனேயில் தங்கியிருந்து வந்தது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் இருந்த ரூ.67 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்தனர். அந்த நகைகள் தானே வர்த்தக் நகர் பகுதியில உள்ள ஒரு வீட்டில் கொள்ளையடித்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.