மாவட்ட செய்திகள்

புதுவையில் சீட்டு நடத்தி ரூ.3.50 கோடி மோசடி

புதுவையில் சீட்டு நடத்தி ரூ.3.50 கோடி மோசடி செய்ததாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுவை கிருஷ்ணா நகர் 14-வது தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 58). சேதராப்பட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் முதலியார்பேட்டை ஜான்சி நகரில் உள்ள ஒரு தனியார் சீட்டு கம்பெனியில் முதலீடு செய்தால் அதிக அளவில் லாபம் கிடைக்கும். அதாவது, மாதந்தோறும் குறிப்பிட்ட பணம் செலுத்தினால் இறுதியில் பணமாகவோ, நிலமாகவோ பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்ததன்பேரில் அங்கு பழனி 7 சீட்டுகள் கட்டியுள்ளார்.

அந்தவகையில் ஒட்டுமொத்தமாக 2016 வரை ரூ.12 லட்சத்து 71 ஆயிரத்து 200 செலுத்தியதாக தெரிகிறது. ஆனால் அந்த நிறுவனம் திடீரென்று மூடப்பட்டது. இதனால் அதிர்ந்துபோன பழனி தர்மபுரியில் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகத்துக்கு சென்று விசாரித்துள்ளார்.

அப்போது அங்கிருந்தவர்கள் விரைவில் சீட்டுக்குரிய பணத்தை திருப்பி தந்து விடுவதாக கூறியுள்ளனர். ஆனால் உறுதியளித்தபடி அவர்கள் பணத்தை தராமல் இழுத்தடித்ததாக தெரிகிறது. இதேபோல் பல்வேறு முதலீட்டாளர்களிடம் ரூ.3 கோடியே 50 லட்சம் வரை அந்த நிறுவனம் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சி.பி. சி.ஐ.டி. போலீசில் பழனி மோசடி புகார் தெரிவித்தார். அதன்பேரில் அந்த சீட்டு கம்பெனியை சேர்ந்த நிறுவனர் சந்தோஷிலால் ரத்தோர், இயக்குனர்கள் கன்சன் ராஜாவாத் குஷ்வா, நிர்மலா ரத்தோர், சையது ரசீது ஹஸ்மி ஆகியோர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.