பெரம்பலூர்:
நகைகளை அடகு வைத்து...
பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள சாமியப்பா நகரை சேர்ந்தவர் காமராஜ்(வயது 55). இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு அருகே உள்ள தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்றார். அங்கு, தனது குடும்ப செலவினங்களுக்காக தங்க நகைகளை அடகு வைத்து ரூ.46 ஆயிரத்தை பெற்றார்.
அந்த பணத்தையும், நகைகளை அடகு வைத்ததற்கான ரசீதையும் ஒரு துணிப்பையில் வைத்து மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்துவிட்டு, கடைவீதி அருகே உள்ள தனது நண்பரின் எலெக்ட்ரிக்கல் கடைக்கு சென்றார்.
திருட்டு
சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளின் பெட்டி உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.46 ஆயிரம் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் காமராஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.