ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் பெரும் அளவில் வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் துபாய் செல்ல வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது 7 பயணிகள் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவர்களிடம் விசாரித்தனர். அதிகாரிகளிடம் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். அவர்களது சூட்கேஸ்களுக்குள் கட்டுக்கட்டாக சவுதி ரியால், அமெரிக்க டாலர் இருந்தன. 7 பேரிடம் இருந்து ரூ.58 லட்சத்து 53 ஆயிரம் மதிப்புள்ள டாலர் மற்றும் ரியால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து 7 பேரின் விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த பணம் யாருடையது? ஹவாலா பணமா? என பிடிபட்ட 7 பேரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.