மும்பை

'சத்ரபதி சிவாஜி என் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தவர்'- சச்சின் தெண்டுல்கர் பேச்சு

மும்பை,

மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாறு குறித்த 'ஜந்தா ராஜா' என்ற நாடக நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் ஜம்பவான் சச்சின் தெண்டுல்கரும் கலந்துகொண்டார். முன்னதாக நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

மாமன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜா எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர். பள்ளியில் வரலாற்று பாடத்தில் நான் முதல் முதலில் படித்த அத்தியாயம் சத்ரபதி சிவாஜி மகாராஜாவை பற்றியது தான். நான் முதன் முதலில் எனது கிரிக்கெட் பேட்டை பிடித்ததும் இந்த சத்ரபதி சிவாஜி மகாராஜா மைதானத்தில் தான் என்பதை நினைவுகூறுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மும்பை பா.ஜனதா தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஆசிஷ் செலார் இந்த நாடக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.