ஆவூர்
விராலிமலை தாலுகாவிற்கு உட்பட்ட மதயானைபட்டி, வில்லாரோடை, கலிமங்கலம், ஆவூர் ஆகிய கிராமங்களை ஒட்டியுள்ள கோரையாற்று பகுதியில் இரவு நேரங்களில் மணல் அள்ளி டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செவந்தி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு அப்பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மதயானைபட்டியிலிருந்து ஆம்பூர்பட்டி வழியாக வந்த ஒரு டிராக்டரை நால்ரோடு அருகே நிறுத்தி போலீசார் சோதனையிட்டபோது அதில் கோரையாற்றில் இருந்து மணல் அள்ளி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஒரு யூனிட் மணலுடன் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்திய மலையேறி கிராமத்தை சேர்ந்த மரியசூசை மகன் அமலதாஸ் (வயது 35) என்பவரை கைது செய்தனர்.