மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த அரசு பள்ளி தடுப்பு சுவர்

வடபாதிமங்கலத்தில் இடிந்து விழுந்த அரசு பள்ளி தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூத்தாநல்லூர்;

வடபாதிமங்கலத்தில் இடிந்து விழுந்த அரசு பள்ளி தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடுப்பு சுவர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி பள்ளி ஆகிய 3 பள்ளிகளும் ஒரே வளாகத்தில் உள்ளது. இந்த 3 பள்ளிகளும் சாலையோரத்தையொட்டி அமைந்துள்ளதால், பள்ளி வளாகத்தை சுற்றிலும் மாணவர்கள் கவனம் சிதறாத வண்ணம் தடுப்பு சுவர் கட்டப்பட்டது. இந்த நிலையில் கஜா புயலின் போது மரங்கள் விழுந்து தடுப்பு சுவர் இடை இடையே இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த தடுப்பு சுவர் இதுவரை சீரமைக்கப்படவில்லை.

சீரமைக்க கோரிக்கை

தடுப்பு சுவர்கள் இடிந்து விழுந்ததால், மாணவர்கள் கவனம் சிதற வாய்ப்பு உள்ளது. மேலும் இரவு நேரங்களில் விஷமிகள் பள்ளியின் வளாகத்தில் சென்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தடுப்பு சுவர் இடிந்து விழுந்த இடம் வழியாக அங்கன்வாடி குழந்தைகள் சென்று விடுவதாகவும், இதனால், மாணவர்கள் நலன் பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு இடிந்து விழுந்த தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.