வெள்ளியணை,
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி புலியூர் ராணி மெய்யம்மை அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளின் அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த படைப்பாற்றல் திறன், தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றை கண்டறியவும், வளப்படுத்தவும் கண்காட்சி நடைபெறுகிறது. 38 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் இருந்து 66 படைப்புகளும், 51 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 146 படைப்புகளும் என மொத்தம் 89 அரசு பள்ளிகளிலிருந்து 212 படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. அருகாமை பள்ளிகளில் பயிலும் சுமார் 1,100 மாணவ-மாணவிகள் இந்த கண்காட்சியை கண்டுகளிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் உணவு, பொருட்கள், நம்மைச்சூழ்ந்து இருக்கும் உயிரின உலகம், மனிதர்கள்- சிந்தனைகள் மற்றும் இயங்கு பொருட்கள், கருவிகள் இயங்கும் விதம், இயற்கை கோட்பாடுகள், இயற்கை வளங்கள் என 7 வகையான அறிவியல் தலைப்புகளின் கீழ் மாணவர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் ஒவ்வொரு தலைப்பிலும் முதல் 3 சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர் ஜோதிமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.