மாவட்ட செய்திகள்

மழைநீரை அகற்றாததை கண்டித்து சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் நூதன போராட்டம்

மழைநீரை அகற்றாததை கண்டித்து சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆவடி,

ஆவடி மாநகராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட மூன்று நகர், ஜோதி நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள 10 தெருக்களில் சமீபத்தில் பெய்த கனமழையின்போது சாலையில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கின்றன.

இதையடுத்து மழைநீர் கால்வாய், சாலை வசதி, குடிநீர் வசதி, சுகாதார சீர்கேடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராத ஆவடி மாநகராட்சியை கண்டித்தும், சாலையில் தேங்கி உள்ள மழைநீரை அகற்றாததை கண்டித்தும் நேற்று மாலை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் ஆவடி தொகுதி செயலாளர் ஆதவன், திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் முல்லை தமிழன், நகர துணை செயலாளர் ஷாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.