நாகர்கோவில்,
குமரி மாவட்ட வருவாய்த்துறை பறக்கும் படை தனி தாசில்தார் அப்துல்மன்னன் தலைமையில் உதவி தாசில்தார் குழந்தை ராணி நாச்சியார் மற்றும் அதிகாரிகள் நேற்று காலையில் மணகுடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சாலையோரம் இருந்த பாழடைந்த கட்டிடத்தில் தார்பாயால் சாக்கு மூடைகள் மூடப்பட்டு இருந்தது. சந்தேகமடைந்த அதிகாரிகள் தார்பாயை அகற்றி பார்த்தபோது, 2,200 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அரிசியை பறிமுதல் செய்து, அதை கடத்த முயன்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.