திருச்சி,
சமரச தீர்வு மையம் தொடங்கி 14-ம் ஆண்டு நிறைவடைந்ததையொட்டி இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்ட சமரச தீர்வு மையத்தில் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தலைமை தாங்கினார். மேலும் சமரச தீர்வு மையத்தின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை அவர் பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் நிலுவையில் உள்ள சிவில், குடும்பநலம், காசோலை வழக்குகள் என மொத்தம் 104 மனுக்களுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சத்தியதாரா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், மாநகர துணை போலீஸ் கமிஷனர் மயில்வாகனன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், அரசு வக்கீல் ஜெயராமன் உள்பட நுகர்வோர் அமைப்பினர், வக்கீல்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.