மாவட்ட செய்திகள்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு

பவுர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் காவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வத்திராயிருப்பு,

பவுர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் காவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சுந்தரமகாலிங்கம் கோவில்

வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் எண்ணற்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகிறார்கள்.

அதன்படி மாசி மாத பவுர்ணமியையொட்டி தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர்.

சாமி தரிசனம்

காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. பக்தர்கள் உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கைகளைக் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்த பின்னரே மலைப்பாதை வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள வழுக்குப் பாறை, சங்கிலிப் பாறை, கருப்பசாமி கோவில் ஓடை பகுதிகளில் நீராடிய பின்னர் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர்.

18 வகையான அபிஷேகம்

பவுர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.