நாடாளுமன்ற தேர்தல்-2024

ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம்: நயினார் நாகேந்திரன் பணம் தான் - முதல் தகவல் அறிக்கை வெளியீடு

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது.

சென்னை,

சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 6-ந்தேதி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை கொண்டுசென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பணம் என்றும் வாக்காளர்களுக்கு கொடுக்கத்தான் பணத்தை எடுத்து சென்றதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

இந்த பணத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இதையடுத்து நேரில் வந்து ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பினர்.

இந்த நிலையில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. தனது பணம் இல்லை என்று நயினார் நாகேந்திரன் மறுத்த நிலையில், அவரது பணம்தான் என முதல் தகவல் அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் அடையாள அட்டை, பா.ஜ.க. உறுப்பினர் அட்டையை பறிமுதல் செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

SCROLL FOR NEXT