மாவட்ட செய்திகள்

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

அம்பேத்கர் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 19-ந் தேததி பேச்சுப்போட்டி நடக்கிறது.

திருப்பத்தூர்

அம்பேத்கர் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 19-ந் தேததி பேச்சுப்போட்டி நடக்கிறது.

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச்சான்றிதழ் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நடத்தப்பட உள்ளது. போட்டியில் பங்கேற்கும் கல்லூரி, பள்ளி மாணவர்களை 2 பேர் வீதம் அந்தந்த கல்லூரிகளின் முதல்வர் மற்றும் பள்ளிகளின் தலைமைஆசிரியர்களே தேர்வு செய்து போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.2000 என்ற வகையில் வழங்கப்படும். மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்குள் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப்பரிசு தொகை ரூ.2000 வீதம் வழங்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும். இதில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.