பூந்தமல்லி,
குன்றத்தூரில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. குன்றத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சேக்கிழார் நகர் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் செலவில் 2008-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் அண்ணா நூற்றாண்டு விழா பூங்கா திறக்கப்பட்டது.
இங்கு சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நடைபாதை அமைந்துள்ளது. தினந்தோறும் மாலை 5 மணிக்கு திறக்கப்படும் இந்த பூங்கா இரவு 8 மணி வரை செயல்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த பூங்கா சரிவர பராமரிக்காமல் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து காட்சி அளிக்கிறது. மேலும் ஊஞ்சல்கள் அனைத்தும் உடைந்து காணப்படுகிறது.
இதனால் பூங்காவுக்கு பெற்றோருடன் வரும் சிறுவர்கள் எந்த விளையாட்டையும் விளையாட முடியாமல் ஏமாந்தபடி செல்கின்றனர்.
தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் மாலை நேரங்களில் இந்த பூங்காவில் குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் அதிக அளவில் தங்கள் குழந்தைகளுடன் வருகின்றனர். ஆனால் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து காணப்படுவதால் பூங்காவில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே அண்ணாவின் பெயரில் திறக்கப்பட்டுள்ள இந்த பூங்காவை முறையாக பராமரித்து உடைந்து காணப்படும் விளையாட்டு உபகரணங்களை புதிதாக மாற்றி தர வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.