லண்டன்,
இங்கிலாந்து அணிக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் கடந்த 17-ந்தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 391 ரன்களும், இங்கிலாந்து 291 ரன்களும் எடுத்தன. 100 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 362 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி, இங்கிலாந்துக்கு 463 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து, 4-வது நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களுடன் தடுமாறியது. பொறுப்பு கேப்டன் ஜோ ரூட் 75 ரன்களுடன் களத்தில் இருந்தார். நேற்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், இங்கிலாந்து அணி 58.1 ஓவர்களில் 209 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
இதன் மூலம் நியூசிலாந்து அணி 253 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்த போட்டியில் மெதுவாக பந்து வீசியதால், இங்கிலாந்து அணிக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிப் பட்டியலில் இருந்து 12 புள்ளிகளையும் ஐசிசி பறித்துள்ளது.
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இதனால் தொடரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 25-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.