கிரிக்கெட்

ஐ.பி.எல்: பெங்களூரு அணியை வாங்க 6 நிறுவனங்கள் போட்டி

அமெரிக்காவைச் சேர்ந்த இரு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.

தினத்தந்தி

பெங்களூரு,

கடந்த ஜூன் 3-ந்தேதி நிறைவடைந்த 18-வது ஐ.பி.எல் கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி முதல்முறையாக பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது . அத்துடன் அந்த அணிக்காக ஆரம்பம் முதலே விளையாடி வரும் நட்சத்திர வீரர் விராட் கோலியின் நீண்ட கால ஏக்கமும் தணிந்தது.

இதனால் பெங்களூரு அணியின் வெற்றியை பிரமாண்டமாக கொண்டாட பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. பெங்களூரு அணி நிர்வாகம் மீது நிறைய விமர்சனங்கள் எழுந்தன. அத்துடன் அந்த அணிக்குரிய உள்ளூர் ஆட்டங்கள் நடக்கக்கூடிய சின்னசாமி ஸ்டேடியம் பெரிய நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது. கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து பெங்களூரு அணி விற்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அது இப்போது அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2008-ம் ஆண்டில் நடந்த ஏலத்தில் பெங்களூரு அணியை ரூ.438 கோடிக்கு பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வாங்கினார். சில சீசன்களில் அணியை வெற்றிகரமாக நடத்தினார். பிறகு வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாமல் மல்லையா 2016-ம் ஆண்டு லண்டனுக்கு தப்பி சென்றதால், பெங்களூரு அணி இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மதுபான நிறுவனமான டியாஜியா வசம் சென்றது. டியாஜியோவின் துணை நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் ஆர்.சி.பி. ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளை நிர்வகித்து வருகிறது.

இத்தகைய சூழலில் ஆர்.சி.பி. ஆண்கள் மற்றும் பெண்கள் அணியை விற்பனை செய்ய இருப்பதாக மும்பை பங்கு சந்தைக்கு டியாஜியோ கடிதம் எழுதியுள்ளது. தனது உரிமத்தை விற்கும் செயல்முறையை தொடங்கியுள்ள டியாஜியோ, அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் இந்த விற்பனை நடவடிக்கைகளை முழுமையாக முடிக்க திட்டமிட்டுள்ளது.

பெங்களூரு அணியின் தற்போதைய மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டாலராக ( இந்திய மதிப்பில் ரூ.17,240 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அந்த வகையில் பெங்களூரு அணியை வாங்க கொரோனா தடுப்பூசி தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம், அதானி குழுமம், ஜே.எஸ்.டபிள்யூ. குரூப்பின் பார்த் ஜிண்டால், டெல்லியைச் சேர்ந்த ரவி ஜெய்புரியாவின் தேவ்யானி சர்வதேச குழுமம் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இரு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.

.

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை