புதுடெல்லி,
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலையால் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் இரு தரப்புக்கும் இடையே பரஸ்பர கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்படவில்லை. மத்திய அரசு அனுமதி தராமல் இருதரப்பு தொடர்களில் பங்கேற்க முடியாது என அவ்வப்போது பிசிசிஐ கூறி வருகிறது.
இதற்கிடையே கடந்த 2014-ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை. இதனால் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது எனக்கூறி பிசிசிஐ 70 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமான பிசிபி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தீர்ப்பாயத்தில் முறையிட்டது. இது தொடர்பான விசாரணை விரைவில் நடக்கவுள்ளது.
இந்நிலையில் இரு நாட்டு கிரிக்கெட் தொடர் தொடர்பாக மத்திய அரசின் நிலை அல்லது கொள்கை என்ன என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். மேலும் மத்திய அரசின் முன் அனுமதியை பெற வேண்டுமா? என பிசிசிஐ வலியுறுத்தியுள்ளது.
ஐசிசி தகராறுகள் தீர்ப்பாயத்தில் தலைவர் மைக்கேல் பிலாப், ஜேன் பால்சன், அன்னபெல் பென்னட் ஆகியோர் இதன் உறுப்பினர்கள் ஆவர். இதன் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு மீது மேல்முறையீடு செய்ய முடியாது. வரும் அக்டோபர் 1 முதல் 3-ஆம் தேதி வரை விசாரணை நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.