கிரிக்கெட்

சென்னையில் பிக் பாஷ் லீக்... ’சேப்பாக்கம் மைதானத்தை தேர்வு செய்ய இதுதான் காரணம்’ - பிபிஎல் தலைவர் நெகிழ்ச்சி

தொடக்க ஆட்டத்தில், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

சென்னை,

ஆஸ்திரேலியாவின் பிரபலமான டி20 கிரிக்கெட் தொடரான பிக் பாஷ் லீக் (BBL) -ன் தொடக்க போட்டி சென்னை சேப்பாகம் மைதானத்தில் நடபெற உள்ளது.

முதல் முறை

வருகிற டிசம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த தொடக்க ஆட்டத்தில், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியும் மோதுகின்றன. வெளிநாட்டு பிரான்சைஸ் கிரிக்கெட் லீக் ஒன்றின் அதிகாரப்பூர்வ போட்டி இந்தியாவில் நடைபெறுவது கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும்.

சென்னை தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம்

சென்னை ஏன் தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்து பிக் பாஷ் லீக் தலைவர் அலிஸ்டர் டாப்சன் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "இந்தியா முழுவதும் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை ரசிகர்கள் கிரிக்கெட்டை நேசிக்கும் விதம் தனித்துவமானது. இந்த போட்டிக்கு சேப்பாக்கத்தில் மிகப்பெரிய வரவேற்பும், அரங்கம் நிறையும் ஆதரவும் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்றார்.

ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு

டிக்கெட் விற்பனை, ஒளிபரப்பு உரிமைகள் மற்றும் வணிக ரீதியான இறுதி ஏற்பாடுகள் இன்னும் முடிவாகவில்லை. இருப்பினும், பிக் பாஷ் லீக் போட்டி முதன்முறையாக இந்தியாவில், அதுவும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருப்பதாக வெளியான அறிவிப்பு, சென்னை உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வரலாற்று நிகழ்வு, இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் உறவை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாகவும், உலக பிரான்சைஸ் கிரிக்கெட்டில் புதிய அத்தியாயமாகவும் பார்க்கப்படுகிறது.