மும்பை,
உலக கிரிக்கெட்டின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராகக் கருதப்படும் ஜஸ்பிரித் பும்ரா, நடப்பு ஐ.பி.எல். 2026 சீசனில் இதுவரை ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை என்பது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் போட்டியில் வென்ற மும்பை அணி, அதன் பிறகு தொடர்ச்சியாக 4 தோல்விகளைச் சந்தித்துள்ளது. இந்நிலையில், பும்ராவின் பார்ம் குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு அந்த அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனே பதிலடி கொடுத்துள்ளார்.
பும்ரா தனது பார்மை இழந்துவிட்டதாகக் கூறப்படுவதை முற்றிலுமாக மறுத்த ஜெயவர்தனே, அவர் மீது முழு நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில்: "பும்ரா மிகச் சிறப்பாகவே பந்து வீசுகிறார். பிரச்சினை அவரிடம் இல்லை, மற்ற பந்துவீச்சாளர்களிடம்தான் உள்ளது. பவர்-பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி அழுத்தம் கொடுக்கத் தவறுவதால், எதிரணி பேட்ஸ்மேன்கள் பும்ராவின் ஓவர்களில் ரிஸ்க் எடுக்காமல் மிகவும் நிதானமாக விளையாடுகின்றனர். பந்துவீச்சுத் துறை ஒரு யூனிட்டாகச் செயல்படவில்லை. அணியில் பும்ரா மட்டும் பந்துவீச்சாளர் அல்ல. மற்ற வீரர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் பும்ரா ஒருமுறை விக்கெட்டுகளை எடுக்கத் தொடங்கிவிட்டால், அவரைத் தடுப்பது கடினம்" என்றார்.
அணியில் ஏற்பட்டுள்ள சில காயங்கள் மற்றும் வீரர்களின் உடல்நலப் பிரச்சினைகள் தங்களது திட்டங்களைப் பாதித்துள்ளதாகவும், விரைவில் முழு பலத்துடன் களம் காண்போம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.