சென்னை,
கிரிக்கெட் வரலாற்றில் எண்ணற்ற சாதனைகள் படைக்கப்பட்டிருந்தாலும், சில சாதனைகள் காலத்தைக் கடந்து இன்றளவும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன. அப்படிப்பட்ட ஒரு அபூர்வ சாதனையை ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் 1931-ம் ஆண்டிலேயே நிகழ்த்தியுள்ளார். இன்றைய டி20 கிரிக்கெட்டில் கூட கற்பனை செய்ய முடியாத வகையில், வெறும் மூன்று ஓவர்களில் சதம் அடித்து பிராட்மேன் வரலாறு படைத்தார்.
1931 நவம்பர் 2-ம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கண்காட்சி போட்டியில் பிளாக்ஹீத் கிரிக்கெட் கிளப் மற்றும் லித்கோ கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. அந்த போட்டியில்தான் பிராட்மேன் இந்த அரிய சாதனையை நிகழ்த்தினார். அந்த காலகட்டத்தில் ஒரு ஓவரில் 6 பந்துகளுக்குப் பதிலாக 8 பந்துகள் வீசப்பட்டன. எனவே, மூன்று ஓவர்களில் மொத்தம் 24 பந்துகள் கிடைத்தன. இதில் வெறும் 22 பந்துகளிலேயே பிராட்மேன் தனது சதத்தை பூர்த்தி செய்தார். அதிரடியாக விளையாடிய பிராட்மேன், வெறும் 18 நிமிடங்களில் 100 ரன்களை எட்டினார்.
இந்த போட்டி முதல்தர அல்லது சர்வதேச போட்டியாக நடத்தப்படாததால், இந்த சாதனைக்கு ஐசிசி அதிகாரப்பூர்வ உலக சாதனை அங்கீகாரம் வழங்கவில்லை. அங்கீகாரம் பெறவில்லை என்றாலும், கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த மற்றும் வியப்பூட்டும் பேட்டிங் நிகழ்வுகளில் ஒன்றாக இந்த இன்னிங்ஸ் கருதப்படுகிறது.