சென்னை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடக்கிறது. தினமும் சாலை மறியல், ரெயில் மறியல் போன்ற போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்தநிலையில், சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டி நடத்தினால் போராட்டம் நடத்துவோம் என்று பல்வேறு அமைப்புகள் அறிவித்துள்ளன. பல அமைப்புகள் போட்டியை காண ரசிகர்கள் நேரில் செல்லக்கூடாது என தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான கிரிக்கெட் போட்டி நாளை இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டு விட்டன. பல்வேறு தரப்பில் இருந்தும் வரும் கடும் எதிர்ப்புகளால் இந்த போட்டியை காணவரும் ரசிகர்கள் பலவித சோதனைகளுக்கு பின்பே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். போட்டியை பார்க்கவரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
நாளை நடைபெறும் போட்டியை முன்னிட்டு, சென்னை அணி வீரர்கள் இன்று பயிற்சியில் ஈடுபட்டனர். இதற்காக தங்கியிருந்த ஓட்டலில் இருந்து பலத்த பாதுகாப்புடன் மைதானத்திற்கு வீரர்கள் வந்தனர். அதேபோல், பயிற்சிக்கு பிறகு, முன்னும் பின்னும் போலீஸ் ரோந்து வாகன பாதுகாப்புடன் தனித்தனி கார்களில் சென்னை வீரர்கள், அவர்கள் தங்கியிருந்த ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.