பெங்களூரு,
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வரும் 9ந்தேதி தொடங்குகிறது. சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
போட்டி நடைபெற இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன. இந்நிலையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கலுக்கு கடந்த மார்ச் 22ந்தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, உடனடியாக தேவ்தத் படிக்கல் தனிமைப்படுத்தி கொண்டார். ஏற்கனவே, டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் அக்சர் படேல் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் நிதிஷ் ராணா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த மார்ச் 22ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட படிக்கலுக்கு ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என முடிவுகள் வெளிவந்த பின்னர், அணியின் உயிர் பாதுகாப்பு வளையத்தில் இணைவதற்கு தகுதி பெற்று விடுவார்.
அவர் நலமுடன் உள்ளார். வருகிற ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்து உள்ளது.