மும்பை,
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற 19-வது ஐ.பி.எல். தொடரின் 24-வது லீக் ஆட்டத்தில், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
தசைப்பிடிப்பு காரணமாக மும்பை அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மாவுக்கு இந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக இந்த சீசனில் முதல்முறையாக ஆடும் லெவனில் இடம்பிடித்த குயின்டான் டி காக், தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்த அவர், 60 பந்துகளில் 112 ரன்கள் (8 பவுண்டரி, 7 சிக்சர்) குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இந்த சதத்தின் மூலம் குயின்டான் டி காக் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு அபூர்வ சாதனையைப் படைத்துள்ளார். இது ஐ.பி.எல். தொடரில் அவர் அடிக்கும் 3-வது சதம் ஆகும். டெல்லி, லக்னோ மற்றும் மும்பை என மூன்று வெவ்வேறு அணிகளுக்காக சதம் அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு லோகேஷ் ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
இருப்பினும் இப்போட்டியில் பஞ்சாப் அணி வெற்று பெற்றது. இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு தொடரில் தனது 4-வது வெற்றியைப் பதிவு செய்து, புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அதே நேரத்தில், விளையாடிய 5 ஆட்டங்களில் 4-வது தோல்வியைத் தழுவிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.